Saturday 9 December 2017

துடுப்பில்லா படகுகள்

                         - பகுதி - (3)


பெண்கள் எப்போதுமே சில தியாகங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது யரோ ஒருவருக்காக மட்டும் என்பது நிதர்சனம் சில பெண்கள் சில வி்ஷயங்களை செய்து விட்டு நம்மை அண்ணாந்து பார்க்க வைத்துவிடுவார்கள் அந்தவகையில் இன்று நான் பார்த்த சில வித்தியாசமான பெண்களை இங்கே பதிவிட போகிறேன் படியுங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் அதோடு கொஞ்சம் சோகமும் கலந்திருக்கும் எப்போதும் அதிக தித்திப்பு அதிக சுவை தறாது கொஞ்சம் உவப்பும் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா படித்துவிட்டு சொல்லுங்கள் எப்படி என்று.



எனக்கு தெரிந்த ஒருவர் சமையல் வேலை செய்கிறார். அதிகம் படிக்கவில்லை பார்த்தால் கொஞ்சம் வெகுளி மட்டுமல்ல நேர்மையானவரும் கூட அம்மா, அக்கா, தங்கை, தம்பி என்று பெரிய குடும்பம் இவர் தான் கடைசி திருமணம் ஆகவில்லை  வறுமையின் காரணமாக திருமணம் செய்யவில்லை அப்போது இருந்த சூழ்நிலையில் வழியில்லை அதனால் திருமணம் வேண்டாம் என்று விட்டார். அக்கா, தங்கைகளுக்கு திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தை பிறந்து அவர்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அன்று வரதட்சணை கொடுக்க முடியாமல் இவர் திருமணம் செய்ய முடியவில்லை ஆனால் அக்கா பிள்ளைகளுக்கு இன்று இவரின் பணத்தை வைத்து திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அக்கா குழந்தைகளுக்கு திருமணம் செய்துவிட்டுதான் தான் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறதாம் அவர்களுக்கு முடித்துவிட்டு பிறகு தனக்கு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். கையில் ஒரு சேமிப்பும் இல்லை எல்லாமே அக்காவிற்கும் அக்கா குழந்தைக்குமே செய்துவிட்டு கையில் பணமே இல்லாமல் இருக்கிறார். நான் அவரிடம் சொன்னேன் உங்களுக்கென்று தனி சேமிப்பு வைத்துக்கொள்ளுங்கள் அது உங்களுக்கு பின்னாளில் உதவியாக இருக்கும் என்றேன். அதற்கு அவர் சொல்கிறார் எனக்கு வேண்டாம் எங்க அக்கா பிள்ளைகள் என்னை பார்த்துக்கும் என்று சொல்கிறார் நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாகவே இல்லை இப்படி சில மனிதர்கள் பூமியில் இருக்கதான் செய்கிறார்கள் பெற்ற பிள்ளையே கவனிக்காத போது மற்ற பிள்ளைகள் எப்படி கவனிப்பார்கள் யோசிக்க வேண்டும் இல்லையா?

இன்னொருவர் 68 வயது நிறைந்த வயதான அம்மா ஓய்வு பெற்ற ஆசிரியயை இவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அக்கா அண்ணன், தங்கை, தம்பி என பெரும் குடும்பத்தில் வசித்தவர். இவர்கள் எல்லாம் நம்மை பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கையோடு இருந்தவர். பணி ஓய்வு பெற்றதும் ஒரு பெரும் தொகை கையில் கிடைத்து இருக்கிறது அந்த பணத்தை அப்படியே எல்லா பிள்ளைகளுக்கும் பங்கு பிரித்து கொடுத்து இருக்கிறார். சொந்த வீடும் இருந்திருக்கிறது இவர் சம்பாத்தியத்தில் கட்டிய வீடு அதையும் விற்று எல்லோருக்கும் பங்கு கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் பிறகு நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துகிறார். இப்போது இவருக்கு கையில் பணமும் இல்லை இருக்க வீடும் இல்லை அக்கா பிள்ளைகள் வீட்டுக்கு சென்றால் அவர்கள் எல்லாம் ஒவ்வொரு காரணம் சொல்லி இவரை நிராகரொத்து உள்ளனர். இவர் மனம் நொந்து இப்போது தனியாக வசிக்கிறார் மாசம் ஓய்வூதியம் கொஞ்சம் வருகிறது வாடகையும்,  சாப்பாடும் போக மீதம் கையில் பணம் இல்லை. அவரின் நிலையை பார்க்கையில் மனசு வலிக்கிறது. என்னிடம் வந்து எனக்கு ஒரு ஓல்டு ஏஜ் ஹோம் இருந்தால் பார்த்து சொல்லுங்க நான் கடைசி வரைக்கும் அங்கேயே இருந்துடுறேன். இப்ப நான் நல்லா இருக்கேன் ஆனால் இன்னும் கொஞ்சம் வயசான பிறகு என்னால் முடியாது இல்லையா அதனால் எனக்கு நல்ல இடமா பார்த்து சொல்லுங்க என்று கெஞ்சுகிறார். நானும் அவருக்கா நல்லா இடமா தேடிக்கொண்டு இருக்கிறேன் இதை படிக்கின்றவர்கள் உங்களுக்கு தெரிந்த முதியோர் இல்லம் இருந்தால் தகவல் சொல்லுங்கள்.

இந்த காலத்தில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காத நிலையில் உலகம் உள்ளது இவர் ஒரு ஆசிரியை அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது இன்னும் எத்தனை பேர் இந்த உலகத்தில் நம்பி ஏமாந்து போகப் போகிறார்களோ தெரியவில்லை. நான் ஒரு சில ஹோம் சென்று பார்த்தேன் உண்மையில் மனம் கனத்து வீடு திரும்பினேன். இன்னும் தேடுகிறேன் .. தேடிக்கொண்டே இருக்கிறேன்.

அடுத்து இவருக்கு என் பெயர்தான் இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை அம்மா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என்று இருக்கிறார்கள். தங்கைக்கும் திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது தம்பிக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்றால் காக்கா வலிப்பு இருக்கிறதாம் அது எப்போதோ வந்திருக்கிறது. எங்கள்  அலுவலகத்தில் க்ளினிங் பணி செய்கிறார் இரண்டு வருடமாக அவரை எனக்கு தெரியும் இதுவரை அப்படி நடந்து நான் பார்த்தது இல்லை ஆனால் அதை காரணமாக வைத்து இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. வீட்டில் உள்ளவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். இப்போது 41 வயது நாங்கள் எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டார். இப்போது தனியாகதான் இருக்கிறார் கையில் சேமிப்பு இருக்கிறது பராவியில்லை அம்மா, தம்பிகள் பாசமாக இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தை மனதில் சுமந்து கொண்டுதான் வாழ்கிறார்கள். என்னதான் வாழ்கையில் போராட்டங்களை சத்தித்தாலும் அதில் சில ரணங்கள் இருக்கதான் செய்யுது சில தியாகங்கள் இருக்கத்தான் செய்யுது. சிலர் நம்பி ஏமாறுகிறார்கள் சிலர் நம்பிக்கைதான் வாழ்க்கை என்று வாழ்கிறார்கள்.

இவையெல்லாம் நான் காணும் போது எனக்கு அது ஒரு படிப்பினையை கொடுக்கிறது. இதுதான் உலகம் இந்த உலகத்தில் தான் நாம் எதிர்நீச்சல் போட வேண்டும் எனற செய்தியை நமக்கு உணர்த்துகிறது என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த இந்த மூவருமே என்ன பாவம் செய்தார்கள் ஏன் இவர்கள் வாழ்க்கை திசை மாறியது? அப்போ வாழ்க்கை என்றால் என்ன இன்னும் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் என்று சிந்திக்க வைக்கிறது. இந்த உலகம் ரொம்ப பெருசு அதில் நீந்து கின்ற சிறு மீன் குஞ்சு நாம், எப்ப வேண்டுமென்றாலும் நாம் யாரிடமாவது மாட்டுவோம். வாஸ்த்து பார்க்கின்றவன் கையில் சிக்கினால் நீண்ட நாள் உயிரோடும் சிறையில் அடைக்கப்படுவோம் அதே ஒரு மீனவன் கையில் மாட்டினால் யாரோ ஒருவரின் வயிற்றுக்கு இறையாவோம் எல்லாம் அவன் செயல்... இவையெல்லாம் பட்டியில் படுத்துக்கொண்டு அசைப்போடுகின்ற ஆட்டுக்குட்டியாய் நான் ஒவ்வொன்றாய் அசைப்போடுகிறேன் அவை ஒவ்வொன்றா ஜீரணித்தப்படி....

       - குறும்பாடு எல்லையின் விளிம்பில்

2 comments:

  1. உங்கள் பதிவு எல்லோருக்கும் அநுபவப்பாடத்தைக் கற்றுத்தருகிறது.
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜி...😄

    ReplyDelete