Tuesday 7 November 2017

காஞ்சி ஒரு சிறப்பு தரிசனம்

           நெடுநாட்களாக காஞ்சிபுரம் சென்று வரவேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. திருவாரூரில் பிறப்பதற்கும் காஞ்சியில் கால் வைப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்.. அதற்காக நான் செல்லவில்லை என்னப்பன் சிவபெருமானை தரிசிக்க சென்றேன்...



                ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஐந்து பஞ்சபூதங்களில் இதுவும் ஒன்று நிலத்திற்கு உரிய ஐயன் இவன். அழகான கட்டிட கலை கண்களை கவர்ந்தன உள்ளே போகும் போது ராஜகோபுரம் மிக அழகாக நம்மை வரவேற்கிறது உயரிய கொடிமரம் அதன் அருகிலே ஒய்யாரமாக நிற்கிறது.



               முதலில் நந்தி தேவரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றேன் பார்க்கும் இடமெல்லாம் கற்தூண்கள். அங்கே மாமரம் ஒன்று தலைவரிச்சமாக சொல்லப்படுகிறது.

                ஐநூறு  ஆண்டு பலமை வாய்ந்த மரம் என்று வரலாறு சொல்கிறது. பிறகு எம்பெருமானை  தரிசித்து விட்டு மீண்டும் நந்தி தேவரிடம் நன்றியை சொல்லிவிட்டு் வெளியே வந்தேன்.

             அடுத்து அப்படியே காஞ்சி காமாட்சியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோமே என்று சென்றேன். பிறகு அம்பாள் கோவம் கொண்டு உனக்கு என்ன அவ்வளவு ஆணவம் என்னை தரிச்சிக்காமல் சென்றுவிட்டாயே என்று சூலாயுத்ததை என் முன்னே கொண்டு வந்து நீட்டிவிட்டால் என்ன செய்வது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? காஞ்சி காமாட்சியால்தான் காஞ்சிக்கே பெருமை என்று பலர் நினைக்கலாம் ஆனால் அதுவல்ல காஞ்சிபுரத்தில் மட்டும் 108 சிவ ஆலயங்கள் இருக்கிறது வேறெங்கும் அதுபோன்று கிடையாது. அதனால் அந்த ஊரில் கால் வைத்தாலே புண்ணியம் என்கிறார்கள்.




              சரி வாங்க நாம காமாட்சி அம்மனை காண செல்லலாம் நான் ஒரு வழியாக கோயில் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து சென்றேன் அங்கே இரண்டு வழிகள் இருந்தது. ஒன்று புதிய காமாட்சி இன்னொன்று ஆதி காமாட்சி.  நான் எங்கே முதலில் செல்வது என்று ஒரு நொடி திகைத்தேன் என்ன செய்யலாம் என யோசித்த போது அங்கே ஒரு ஆட்டோ டிரைவர் நின்று கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் எப்படி செல்வது என்றேன். அவர் உடனே சொன்னார் இதான் ஆதி காமாட்சி இங்கே முதலில் சென்றுவிட்டு அதன் பிறகு அங்கே செல்லுங்கள் இங்கே 1மணிக்கு நடை சாத்திவிடுகார்கள் பிறகு பார்ப்பது கஷ்டம் என்றார். அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு ஒரு அர்ச்சனையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நான் போன நேரம் நல்ல நேரம் போல அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.


                எல்லா அபிஷேகம் கண் குளிர பார்த்தேன் அங்குதான் முதன் முதலில் ஆதி சங்கரர் மேரு சக்கத்தை பிரதிஷ்டை செய்தார். அம்மன் பார்ப்பதற்கு அத்தனை ஒரு அழகாக இருந்தார்  பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த கூட்டத்தில் நான் முன்னாடி நின்று பார்த்ததில் ஒரு தனி சந்தோஷம். அதற்கும் ஒருவர் காரணம் என்னை ஒரு பெண்மணி இடித்து இடித்துக்கொண்டே இருந்தார். அப்போது ஒருவர் அம்மா நீங்கள் முன்னாடி போங்க என்றார் நான் உடனே முன்னாடி சென்று மன நிறைவோடு பார்த்தேன். அதற்கு இடையில் அவர் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தார் அவரின் மகனிடம் என்னடா படிக்கிற எங்க படிக்கிற என விசாரித்தார் அந்த பையனும் தான் படிக்கின்ற இடத்தை சொன்னன். அப்போது ஒரு வினாடி நான் அவரை ஆச்சரியமாக பார்த்தேன் ஏன் என்று கேட்கின்றீர்களா? அவர் அந்த பையனிடம் "தம்பி தமிழை மட்டும் படிச்சுறாத தமிழ்.. தமிழ்னு சொல்வாய்ங்க அது கோஷம் போடதான் நல்லாருக்கும் வாழ்க்கைக்கு ஒத்துவராது அதனால யார் என்ன சொன்னாலும் தமிழை படிக்காத என அறிவுரை சொன்னார். அதுதான் என்னை அவரை திரும்ப பார்க்க வைத்தது நான் லேசாக சிரித்தபடி அவரை கடந்து கோவிலை சுற்றி வந்தேன்.

                என் பின்னே அவரும் வந்தார் என்னிடம் விபூதி கொட்டி வைக்க பேப்பர் இருக்குமா என்று கேட்டார் நானும் கொடுத்தேன். அப்போது அவர் மேற்கொண்டு என்னிடம் பேச்சுக்கொடுத்தார். நீங்க டீச்சரா எங்க வேலை பார்க்குறீங்க எங்கே இருந்து வர்றீங்க என்று விசாரித்தார் நான் எங்கே வேலை செய்கிறேன் என்பதை நானும் சொன்னேன். ஓ... அப்படியா என்று வியந்தார் உங்களை பார்த்தால் டீச்சர் போன்று இருக்கிறது அதோடு எங்கள் பள்ளியில் உங்களை போன்று ஒருவர் இருக்கிறார் அவரா இருக்குமோ என்று விசாரித்தேன் என்றவர். நான் இங்கே பள்ளியும், கல்லூரியும் வைத்து நடத்துகிறேன். நான் அந்த கல்லூரியின் தாளாலர் என்றார். ஓ... ஒரு கல்லூரின் முதல்வரா ஒரு மாணவனுக்கு தவறான வழியை சொல்கிறார் நீங்கள் அப்படி சொல்லக்கூடாது சார் என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கிவிட்டேன். ஏனெனில் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான் நாம் மேற்கொண்டு சொல்ல வந்த இடத்தில் விவாதம் வேண்டாம் அதுவும் கோவிலில் வேண்டாம் என்று சிரித்தப்படி அங்கிருந்து சென்றேன்.

                கோவிலை விட்டு வெளியே வந்த நான் புதிய காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றேன் உண்மையில் புதிய கலைநயத்தோடு பளபளத்தது கோவில். உள்ளே சென்றால் பெரிய க்யூ நின்றது அம்மாடி இதில் எப்படி போவது என்று வேறு வழி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அங்கே ஒரு கட்டிடத்திற்கு அருகே ஒரு சின்ன க்யூ நின்றது அங்கே போய் விசாரித்தேன் ஸ்பெஷல் டிக்கெட் எடுத்து சென்றால் அம்மனை அருகில் தரிசிக்கலாம் என்று சொன்னார்கள். நானும் உள்ளே சென்று எந்த பணமும் கொடுக்காமல் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே சென்று அம்பாளை பார்த்தேன்... அடடடா... காமாட்சி கொள்ளை அழகு பார்க்க பார்க்க அப்படி ஒரு அழகாக இருந்தாள் அன்னை காமாட்சி..

அந்த காட்சியை மனதில் நிறுத்தியபடி வெளியே வந்தேன். மனம் ஏதோ ஒரு அமைதியில் இருந்தது உண்மை. 

No comments:

Post a Comment