Saturday 23 September 2017

நீயும் நானும்

ஏனடி நீ என் மனதில்
இத்தனை ஆசைகளை
விதைத்து செல்கிறாய்..?
வறண்ட பூமியில்
தண்ணீருக்காக போராடும்
விவசாயி போல் - உன்
வருகைக்காக வழிமேல் விழிவைத்து
ஆசையோடு காத்திருக்கிறேன் நான்...!



அழகான இடங்களை எல்லாம் உன்னை
அழைத்து வந்து காட்டி அதை - நீ
மெய்மறந்து ரசிப்பதை - நான்
மறைவாக நின்று ரசித்திட வேண்டும்
உன் கைப்பிடித்து பல கதைகள்
பேசியபடி நெடுந்தூரம் செல்லும்
சாலையில் பயணிக்க வேண்டும்..!

தலைவாழை இலையிட்டு - அதில்
பரவலா நிறைய பருக்கையிட்டு
பறப்பன ஊர்வன ஒரு பக்கம் இருக்க
நல்ல மணத்தோடு நாட்டுக்கோழி
குழம்பு மறுபக்கம் இழுக்க
வஞ்சிரம் வறுவலும் இறால் தொக்கும்
வக்கனையா உனைப் பார்த்து சிரிக்க
என் ராசாவின் மனசிலே ராஜ்கிரனைப் போல்
நீ சாப்பிடுவதை நான் ரசிக்க வேண்டும்..!

பகல் போல் பவுர்ணமி நிலவு
பளிச்சென இருக்க...
பாசமாய் நாமெல்லாம்
நிலாச்சோறு ருசிக்க
அந்த மொட்டை மாடி இரவில்
மடி தந்து நீயும் நானும்
தாயும் சேயுமாய் மாற வேண்டும்..!

எதையோ நான் தவறாக சொல்ல
அதையே நீ திருத்தமாக சொல்லி
நறுக்கென என் தலையில்
செல்லமாய் நீ குட்டிட வேண்டும்...!

தூங்கும் அறையில் தூக்கம்
வராமல் நீ புரள உன் தலைகோதி
சத்தம் இல்லாத முத்தம் தந்து
நீ தூங்கும் அழகை நான் கண்டிட வேண்டும்...!

தூரத்தில் இருக்கும் உன்னோடு
கனவோடு சிலநாள் நினைவோடு
ஒவ்வொரு நாளும் கழிகிறது
 என் வாழ்நாள் ..!

இந்த உலகத்தில் நீயில்லா நாளில்
அந்த செய்தி என் காதுகளை
எட்டும் முன் நான் மரித்திட வேண்டும்...!

(ஏட்டில் சொன்னது சிறிதளவு
என் எண்ணத்தில் உள்ளது
கடலளவு காயம்பட்டாலும்
கலங்காது உனை நினைத்திடும்
மனம் எனக்கு நிறைய உண்டு..!)


4 comments:

  1. தலைவாழை இலையிட்டு - அதில்
    பரவலா நிறைய பருக்கையிட்டு
    பறப்பன ஊர்வன ஒரு பக்கம் இருக்க
    நல்ல மணத்தோடு நாட்டுக்கோழி
    குழம்பு மறுபக்கம் இழுக்க
    வஞ்சிரம் வறுவலும் இறால் தொக்கும்
    வக்கனையா உனைப் பார்த்து சிரிக்க
    என் ராசாவின் மனசிலே ராஜ்கிரனைப் போல்
    நீ சாப்பிடுவதை நான் ரசிக்க வேண்டும்..!

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... நன்றி நண்பரே

      Delete