Saturday 25 October 2014

நமது வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும்

         நமது எண்ணங்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு காரியமும் நல்லதாகவும் கெட்டதாகவும் அமைகிறது. நமது மனதில் நல்ல எண்ணங்களும் உண்டாகும் சில சமயங்களில் கெட்ட எண்ணங்களும் உண்டாகும.

        இந்த இரண்டு எண்ணங்களும் தெரிந்தோ தெரியாமலோ நாம்தான் காரணகர்த்தாவாகிறோம். நாம் வெளிப்படையாகச் சொல்லும் ஆசைகள் நல்லெண்ணங்களாக உருவெடுக்கிறது. நாம் ரகசியமாக மனதில் வைத்துக்கொள்ளும் கெட்ட ஆசைகள் தீய எண்ணங்களாக வடிவெடுக்கின்றன. இரவு வந்துவிட்டால் நாம் இருட்டிவிட்டதே என்று கவலைப்படுவதில்லை. ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் போதும் இருள் தானாகவே அகன்று விடும். அதேபோன்று நல்லெண்ணங்களுக்கு முக்கியமான இடம் கொடுத்துப் பழகினால் தீயவை தானாகவே மறைந்து விடும்.

         எது நல்லது? எது கெட்டது? தாம் அதன் மூலமாக பெறுகின்ற உணர்ச்சியைப் பொறுத்து தான் அது அமைகிறது. என்னிடம் தோன்றும் எண்ணம் என்னைப் பற்றிய தற்பெருமையை பிறரிடம் பொறாமையை என்னுடைய சுயநலத்தைத் தூண்டி விட்டால் அவை கெட்டவைஎன்னிடம் ஏற்படும் எண்ணங்கள் பிறருடைய நன்மைக்காகச் சேவை செய்யும்படி என்னை எளியவனாக நினைக்க உதவும்படி உன்னுடைய செயலினால் எவருக்கும் கெடுதல் ஏற்படாதபடி அமையுமானால் அவை நல்லவையாகும்.

        எனக்கு எல்லாம் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பவர் எவ்வளவு செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவன் ஏழைதான். எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் இருக்கும் சிறிதளவுள்ள பொருளையும் பிறருக்காகக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி செயல்படுகிறானோ அவன் பொருள் இல்லாவிட்டாலும் செல்வந்தன்தான்.

         ஆக நாம் உலகத்தில் சுவைப்பவை தொடுபவை, உணர்பவை ஒவ்வொன்றையும் ஆண்டவன்தான் அளித்தான் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒரு முயற்சி சுயநலத்திற்காக அமையும் போது தீய எண்ணம் ஆகிவிடுகிறது அதுவே பொது நலத்திற்காக அமையும்போது நல்ல எண்ணம் ஆகிவிடுகிறது.

No comments:

Post a Comment