Saturday 25 October 2014

களவுமணம் கூடா

        பண்டை தமிழருடைய ஒழுக்கம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், சிறப்பு முதலிய செய்திகளை இலங்கியங்கள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

         களவாவது பிறப்பு, கல்வி, வயது, உருவம், திரு முதலியவற்றால் ஒத்த தன்மையுடைய ஓர் ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் ஊழ்வலியினால் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து இன்புற்று ஒழுகுவது.

         கற்பாவது, அங்ஙனம் காதலித்து அவர்கள் பிள்ளைகள் ஊர் அறிய மணந்து கொண்டு இல்லறம் நடத்தி இன்புற்று வாழ்வது இவ்விரு ஒழுக்கங்களையும் புலப்படுத்தும் பாக்களை குறுந்தொகை பாடல்கள் நமக்கு அழகாக சொல்கின்றது. இலக்கியங்களிலே எல்லோருக்கும் பிடித்த இலக்கியம் குறுந்தொகை பல கவிஞர்களை உருவாக்கிய இலக்கியம் என்று கூட சொல்லலாம்.

     அந்த பாக்கள் இதோ...

             தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் காதல் கொண்டு பிறர் அறியாதவாறு களவு மணம் மேற்கொண்டனர் தலைவன் அக்களவொழுக்கத்திலேயே நாட்டமுள்ளவனாய் இருந்தான் அதனால் தலைவி ஊரறியத் தலைவன் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டு தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.


            "யாரு மில்லைத் தானே கள்வன்
             தானது பொய்ப்பின் யானெவன்
            செய்கோ தினைத்தா ளன்ன சிறு
             பசுங் காவை ஒழுகுநீ ரால் பார்க்குங்
             குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே"

                                       - குறுந்தொகை

           அதாவது, தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த போது வேறு எவரும் இல்லை என் நலத்தைக் கவர்ந்த கள்வராகிய தலைவர் மட்டுமே இருந்தார் "உன்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்" விரைவில் உன்னை மணப்பேன் என்று தலைவர் தாம் கூறிய சூளுரையைப் பொய்யாகும்படி நடப்பாராயின் நான் என் செய்வேன்? ஐயோ... சாட்சிகள் ஒன்றுமில்லையே...! எங்கள் களவு மணம் நிகழ்ந்த இடத்தில் குருகு ஒன்று இருந்தது (குருகு என்பது நாரை) அது சான்று கூறும் தகுதி உடையது அன்றே..! மேலும் அது தன் இரையாகிய ஆரல்மீன் வருகிறதா..! என்று கூர்ந்து நோக்கி கொண்டிருந்ததால் தலைவன் சூளுரையைக் கேட்டுமிராது ஆகவே இனி நான் என்ன செய்வேன் என தலைவி புலம்புவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது.

          இச்செய்யுள்ளில் நாம் அறிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால் களவுமணம் என்பது நம் பண்பாட்டுக்கு புறம்பான ஒரு செயல் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

         பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பாடலே சான்று தவறு  செய்துவிட்டபின் எங்கே தலைவன் தன்னை மறந்து செல்வானோ என்று பயந்து நாளை வெளி உலகத்திற்கு தெரிந்தால் தூற்றுவார்களே தலைவன் இல்லை என்று மறுத்துவிட்டால் என்ன செய்வது அந்த இடத்தில் சாட்சிகள் கூட இல்லையே என்று எப்படி அழுது புலம்புகிறாள்.

        இன்றைய காலக்கட்டத்தில் காதலின் மிகுதியால் காதல் மிகுதி என்று கூட சொல்வது தவறு உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தவறு செய்கின்றனர் அவ்வாறு தவறு ஏதும் செய்யாதிருக்கும் பொருட்டுத்தான் புலவர் முன்னரே இச்செய்யுள்ளை இயற்றினாரோ என்னவோ..?

        பெண்களே "உயிரை விட மானம் பெரியது" சேலையில் முள் பட்டாலும் முள் மீது சேலைப்பட்டாலும் பாதிப்பு சேலைக்குதான். உண்மையான காதல் ஒருபோதும் தவறு செய்யாது அப்படி தவறு செய்ய தூண்டினால் அது உண்மையான காதலாக இருக்க முடியாது உங்கள் காதல் எப்படிப்பட்டது என்று இப்போது தெரிந்திருக்கும்.




V

No comments:

Post a Comment